Tuesday, September 13, 2011

ஒரு அற்புத திருக்கயிலாய யாத்திரை

ஓம் நமசிவாய

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நிணைக்கேனே











அது என்ன அற்புத யாத்திரை என்று தலைப்பு என்று யோசிக்கின்றீர்களா? மேலேயுள்ள பதிகத்தையும் படத்தையும் பார்த்தவுடன் புரிந்திருக்குமே. ஆமாம் சிறப்பான ஒருவரின் திருக்கயிலாய யாத்திரை என்பதால்தான் இந்த யாத்திரை அற்புத யாத்திரை ஆனது. அந்த சிறப்பானவர் யார் என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?

பித்தாபிறை சூடிப்பெரு மானேஅரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
அத்தாவுனக் காளாய்இனி அல்லேனென் லாமே.

என்று இறைவனையே பித்தா என்றும் பொன்னார் மேனியனே என்றும் நம்பி என்றும் பாடிப்பரவிய வன்தொண்டர் இவர்.

தமக்காக பிரம்மனுன் திருமாலும் காணா மலர்ப்பாதம் நோக திருவாரூர் வீதியில் பரவையிடம் சிவபெருமானை தூது போக வைத்த எம்பிரான் தோழர் இவர்.

பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
என்று திருத்தொண்டர் புராணம் பாடி தொண்டருக்கும் தொண்டரானவர் இவர்.

தேவாரம் திருவாசகம் பாடி சைவம் வளர்த்த சைவசமயக்குரவர்கள் நால்வருள் ஒருவர்.

அற்பு தப்பழ ஆவணங் காட்டி
அடியனா வென்னை ஆளது கொண்ட
நற்ப தனை
நள்ளாறனை என்று அவரே பாடியது போல கண்ணுதலானும், காம கோபனும், கனக மால் வரையுமான எம்பெருமானாலேயே தடுத்தாட்கொள்ளப்பட்ட சுந்தர மூர்த்தி நாயனார் சென்ற திருக்கயிலாய யாத்திரை என்பதால் இந்த யாத்திரை அற்புத யாத்திரை ஆனது. திருமயிலையில் ஆடி சுவாதியன்று நடைபெற்ற சுந்தரர் திருக்கயிலாயம் ஏகும் படங்கள் இப்பதிவில்.




சுந்தர மூர்த்தி நாயனார்




சுந்தர மூர்த்தி நாயனார், ஆலால சுந்தரர் என்ற திருநாமத்துடன் திருக்கயிலையிலே எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து வரும் காலத்தில் அங்கிருந்த இரு கந்தர்வ பெண்களை பார்த்து மையல் உற எம்பெருமானும் அவர்கள் மூவரையும் பூலோகத்தில் பிறக்க வைத்தார். அப்போது ஆலால சுந்தரர் தகுந்த காலத்தில் தன்னை தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டார்.




திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவ குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையனார், தாயார் இசைஞானியார். குழந்தைக்கு “நம்பி ஆரூரர்” என்ற பெயரிட்டு வளர்த்து வந்தனர். சிறு பிள்ளையாயிருக்கும்போதே குழந்தையின் அழகு தெய்வீகமாய் இருந்தது. பெற்றோரும் இத்தகைய பேரழகு வாய்ந்த குழந்தைக்குப் பல்வேறு அணிகலன்களால் அலங்கரித்து விட்டிருந்தனர். ஒரு நாள் நம்பி ஆரூரர் வீதியில் விளையாட்டுத் தேரான சிறு தேர் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திருமுனைப்பாடி நாட்டு மன்னன் ஆன நரசிங்கமுனையர் அவ்வழியே திருநாவலூர்க் கோயிலுக்கு வந்து எம்பெருமானைத் தரிசித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கையில் வீதியில் தேரை உருட்டிக் கொண்டிருந்த சிறுவனைக் கண்டு அவன் அழகில் தம்மை மறந்தார். தேரிலிருந்தும் இறங்கி அந்த தெய்வக் குழந்தையைக் கையில் தூக்கிக் கட்டி அணைத்து உச்சி முகந்தார்.இவரை தனது தத்துப்பிள்ளையாக்கிக்கொண்டார்.ஆரூரர் அரண்மனையில் ஒரு அரசகுமாரனைப் போல வாழத்தொடங்கினார். அரசர்க்குரிய அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். உரிய பருவத்தில் உபநயனமும் செய்து வைத்தான் மன்னன். பெற்றோர்கள் ஆரூரருக்கு விரைவில் திருமணம் செய்விக்க எண்ணம் கொள்ளவே. அரசரும் அவர்கள் விருப்பம் போல் மணப்பெண்ணைத் தேடித் தேர்ந்தெடுக்குமாறு கூற, பெற்றோர் ஆரூரருக்கு ஏற்ற பெண்ணைத் தேடினார்கள். நாவலூருக்கு அருகே உள்ள புத்தூர் என்ற ஊரிலுள்ள, சடங்கவி சிவாசாரியார் என்பவரின் புதல்வியை ஆரூரருக்குப் பார்த்து மணம் முடிக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன.




தன் அன்பனை ஆட்கொண்டு அவனை தான் இந்த பூவுலகிற்கு வந்த கடமையை நிறைவேற்ற உதவிபுரிய திருவுளம் கொண்ட மாப்பெரும் கருணையன் மணநாள் அன்று கிழ வேதியர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு அற்புத ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். கோபத்தில் நம்பி ஆரூரர் நீர் என்ன பித்தரா? என்று வினவினார். இல்லை இதோ உன் பாட்டனார் எழுதிக்கொடுத்த ஓலை என்று முதியவர் காண்பிக்க கோபத்தில் அதை ஆரூரர் கிழித்தெரிந்தார்.




சுந்தரருக்கு பூஜை







சேரமான் பெருமாள் நாயனார்



(எம்பெருமான் தோழரின் தோழர்)








எம்பெருமானுக்கு செய்யும் மலர் அலங்காரம் போலவே அவரது அன்பருக்கும் செய்துள்ள பாங்கை காணுங்களேன்.

சுந்தரை திருக்கயிலாயத்திற்கு அழைத்து செல்ல



வந்து காத்திருக்கும் வெள்ளை யாணை






இதனால் முதியவர் மூல ஓலை திருவெண்ணை நல்லூரில் உள்லதால் அங்கு சென்று வழக்கை ்தொடர்வோம் என இவ்வழக்கு திருவெண்னை நல்லலூர் சென்றது. அங்கே முதியவர் “திருநாவலூரில் இருக்கும் ஆதிசைவன் ஆகிய ஆரூரன் என்னும் பெயருள்ள நான், திருவெண்ணெய் நல்லூர் பித்தனுக்கு எழுதிக் கொடுத்தது என்னவெனில், நானும் என் வழிவரும் மரபினோரும் வழிவழியாய் இவருக்கு அடிமைத் தொழில் செய்து வருவோம் என்பதற்காக உள்ளும், புறமும் ஒருமைப்பட்டு எழுதிக் கொடுத்த ஓலை. இது என் சுய உணர்வோடு போடப் பட்ட கையொப்பம்.” என்ற ஓலையைக் காட்டினார், கையெழுத்தை சரி பார்த்த பின் பஞ்சாயத்தார் ஆரூரா நீ பித்தனுக்கு அடிமைதான் என்று தீர்ப்புக்கூறினர். ஆரூரருக்கு ஏதும் புரியாவிட்டாலும், அவையோர் சொல்லுக்குக் கட்டுப்பட்டுக் கீழ்ப்படிவதே தன் கடமை என உணர்ந்து தலை வணங்கித் தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்.

அவையோர் முதியவரிடம், “ ஐயா, ஓலையில் நீர் வெண்ணெய் நல்லூரில் இருப்பதாய்க் குறிப்பிட்டுள்ளீர். உம் இருப்பிடம் எதுவென எங்களுக்குக் காட்டுவீராக!” என்று கேட்க, எம்பெருமான் அவர்களை அழைத்துக் கொண்டு தம் இருப்பிடத்தைக் காட்டவேண்டி, அவ்வூரிலுள்ள திருவட்டுறை என்னும் கோயிலை அடைந்தார். அனைவரும் பின் தொடர்ந்து வர அம்முதியவராய் வந்த இறைவனோ, கோயிலுள் சென்றவர் மறைந்தார். பின் ஆரூரர் வேண்ட அந்தணராக வந்த ஈசன், தம் அருள் வடிவிலே, உமையாள் உடனிருக்க ரிஷபாரூடராய்க் காட்சி அளித்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார்.பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சிவத்தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இவ்வாறு செல்லும் போது அம்பலக்கூத்தரின் அருளினால் இவருக்கும் சேர நாட்டை ஆண்டுகொண்டிருந்த சேரமான் பெருமாளுக்கும் நட்பு உண்டானது. இருவருமாக சேர்ந்து பல தலங்களுக்கு சென்று கறைகண்டனை, கங்கை மதி சூடியை, புலியதளாடையனை, வ்யோமகேசனை பலவாறு பதிகங்கள் பாடி போற்றினர்.









நெற்றிக்கண் உடையானை நீறுஏறுந் திருமேனிக்
குற்றமில் குணத்தானைக் கோணாதார் மனத்தானைப்
பற்றிப் பாம்(பு) அரை ஆர்த்த படிறன்தன் பனங்காட்டூர்ப்
பெற்றொன்(று) எறும்பிரானைப் பேசாதார்பேச் சென்னே.





திருக்கயிலாயத்திற்கு புறப்படுகின்றார்






திருவைந்தெழுத்தைக் கேட்டு பறக்கும் குதிரை




சுந்தரர் முதலில் திருவாருரில் பரவையாரை மணந்தார் பின்னர் திருவொற்றியூர் சென்ற சமயம் சங்கிலியாரையும் மணந்தார். அப்போது மகிழ மரத்தடியில் சங்கிலியாரருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டு நீங்கியதால்தன் கண்களையும் இழந்து பின் இறை அருளால் கண் ஒளி திரும்பபெற்று தேவாரம் பாடி, கைலாயத்திலிருந்து வந்த ணி முடித்து கைலாயம் செல்ல இவருக்கு வெள்ளை யானை வந்தது. இவருடைய தோழரான சேரமான் பெருமாளும் அவருடன் கைலாயக் செல்ல வேண்டி ஓம் நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தை தன்னுடைய வெள்ளைக் குதிரையின் காதில் ஓதினார், உடனே அந்த குதிரையும் கயிலாயத்தை நோக்கி பறக்க ஆரம்பித்து விட்டது. எம் பெருமான் தோழர் சுந்தரரின் தோழர் திருவாஞ்சிக்களத்தைச் சார்ந்த சேரமான் பெருமாள் இவ்வாறு கைலாயம் செல்லும் போது திருக்கயிலாய உலா பாடினார்.






குதிரையில் சேரமான் பெருமாள் நாயனார்





ஆத ரம்பயி லாரூரர் தோழமை


சேர்தல் கொண்டவ ரோடே முன்நாளினில்


ஆடல் வெம்பரி மீதேறி மாகயி லையிலேகி



ஆதி யந்தவு லாவாசு பாடிய


சேரர் ....




என்று இதையே அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடுகிறார்.








இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டாராம்.




நீள நினைந்தடியேன் உமைநித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள்வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவைஅட்டித் தரப்பணியே.





என்று அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம்,பரவையாருக்காக குண்டையூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம். இறைவனும் அக்கோரிக்கையை ஏற்று சிவகணங்களை அனுப்பி நெல்லை பரவையாரின் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.




சுந்தர மூர்த்தி நாயனாரும் அவரது நண்பர் சேரமான் பெருமாளும் திருக்கயிலை சென்ற நாள் ஆடி சுவாதி ஆகும். அன்றைய தினம் திரு மயிலையில் சுந்தரர் வெள்ளை யானையிலும், சேரமான் பெருமாள் குதிரையிலும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். இந்த வருடம் இந்த வைபவத்தை காணும் பாக்கியம் கிட்டியது அந்த புகைப்படங்களை எப்போதும் போல் அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் கண்டு இன்புறுங்கள்.







வண்தொண்டர் திருக்கயிலைக் செல்வதைக்காண



கூடி நிற்கும் அன்பர் குழாம்






கற்ப கத்தினைக் கனகமால் வரையை காம கோபணைக் கண்ணுதலானை
சொற்ப தப்பொருள் இருளறுத் அருளுந் தூய சோதியை வெண்ணெய்நல் லூரில்
அற்பு தப்பழ ஆவணங் காட்டி அடியனா வென்னை ஆளது கொண்ட
நற்ப தத்தை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந் என்நிணைக் கேனே
.




அற்புத திருக்கயிலை யாத்திரை

இவ்வாறு சுந்தரரும் சேரமான் பெருமாளும் திருக்கயிலைச் சென்ற போது திருக்கயிலையில் கூடி இருந்த உபமன்யு முதலான முனிவர்களுக்கு ஒரு ஜோதியாக காட்சி கிடைத்ததாம். என்ன அற்புத திருக்கயிலாய யாத்திரையை கண்ட அனுபவம் எப்படி இருந்தது.



Labels: , , ,

திருமயிலை அறுபத்து மூவர் திருவிழா -2

இந்த பதிவிற்காக தாங்கள் LOGAN ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி சொல்ல வேண்டும். என்ன ஆயிற்று கடந்த மூன்று மாதங்களாக பதிவுகள் ஒன்றும் வரவில்லையே என்று பின்னூட்டம் இட்டிருந்தார் அவர்.


செப்டெம்பர் மாதம் யமுனோத்திரி, கங்கோத்திரி, பத்ரிநாத் யாத்திரை, பின்னர் டிசம்பர் மாதம் நவ பிருந்தாவனம், மந்திராலயம் யாத்திரை பின் வீட்டில் ஒரு விஷேசம் என்று இருப்பதாலும், இமயமலையின் இனிய பயணத்தைப் பற்றிய கட்டுரையை எழுதி வருவதாலும் சமயம் குறைவாக இருப்பதால் பதிவிட முடியவில்லை.


பதிவிடுதலை நிறுத்தி விடும் எண்ணம் இல்லை. முடிந்த அவனருளால் அவன் தரும் தரிசனங்களை அன்பர்களாகிய தங்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்ள அவன் அருள் புரியட்டும்.



வரம் தரும் திருமயிலையின் கற்பகாம்பாள்




கபாலீஸ்வர சுவாமியின் பின்னழகு




அம்பாளின் முன்னழகும் பின்னழகும்



இந்தப் பதிவின் ஒரு சிறப்பு அம்சம் இப்படங்கள் அனைத்தும் இரவில் எடுக்கப்பட்டவை. எப்போதும் அறுபத்து மூவர் திருவிழாவை இதுவரை பகலில் தரிசனம் செய்யும் பாக்கியம்தான் கிட்டியுள்ளது சிவசக்தியின் அருளால் இந்த வருடம் இரவில் வடக்கு மாட வீதியில் தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. மின்னொளியில் பஞ்ச மூர்த்திகளும் மற்ற தெய்வங்களும் அற்புத காட்சி தங்கள் முன்னே.


வள்ளி தெய்வாணை உடனுறை சிங்கார வேலவர்





அழகன் முருகனின் பின்னழகு


இந்த அறுபத்து மூவர் திருவிழாவின் ஒரு சிறப்பு கபாலீச்சுர தெய்வ மூர்த்தங்கள் மட்டுமல்ல திருமயிலையின் பல்வேறு ஆலயங்களின் மட்டும் அல்ல சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து முத்துக் குமரனும் இத்திருவிழாவில் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி தருகின்றனர். அதனால் தானோ என்னவோ அறுபத்து மூவர் என்றவுடன் திருமயிலைதான் எல்லாருக்கும் நினைவுக்கு வருகின்றது. வருடா வருடம் கூட்டம் அதிகமாகிக்கொண்டுதான் செல்கின்றது. இந்த வருடம் அடியேன் இரவு சுமார் 9 மணிக்கு திருக்கயிலை நாதனாம் கபாலியை தரிசனம் செய்யும் போது அவர் அப்போது தான் வடக்கு மாட வீதிக்கு எழுந்தருளியிருந்தார்.



பெரியநாயகி உடனுறை வாலீஸ்வரர்


திருமயிலையில் கபாலீஸ்சுரம், வெள்ளீச்சுரம், வாலீஸ்வரம், காரணீஸ்வரம், முதலிய ஏழு சிவாலயங்கள் அமைந்துள்ளன.



சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன்



முத்துக்குமரன் பின்னழகு



வள்ளுவரும் வாசுகியும்



மயிலையிலே கோயில் கொண்டாய் முண்டக கண்ணியம்மா


மயிலை நாதர் நாயகியே முண்டக கண்ணியம்மா

Labels: , ,

திருமயிலை அறுபத்து மூவர் திருவிழா - 2011

பிறையணி படர்சடைமுடியிடை புனலுடை இறையவனை, நாதனாகிய நன்னெறிப் பொருளினை அம்பலத்தாடும் நர்த்தனனை, நீடிய நிமலனை, விரிகடலும் மண்ணும், விண்ணும், மிகுதீயும், புனலெறி காற்றாகி எண் திசையான எம்பிரானை, பொய்யேதுமில்லாத மெய்யன் தன்னை, புண்ணியனை, பல்லுயிர்க்கு துணையானானை, ஆதி மூர்த்தியை, அம்பலத்தானை, புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவளச்சடை முடி தாமரையானை, பாசம் நீங்கிய பசுவாகிய உயிர்களுக்கு பதியாகிய ஈசனை கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சுரம் அமர்ந்தானை, கண்ணார் கயிலை மலையானை திருமயிலையில் அருள் புரியும் கபாலியை

வேதியா, வேதகீதா, விண்ணவரண்ணா, என்றன்சோதியே, மலர்கள் தூவியொருங்கி நின்கழல்கள் காண பாதியோர் பெண்ணைக் கொண்டவனே, படர்சடை மதியஞ்சூடும் ஆதியே, ஆண்டவனே, அழகனே, அறிவனே என்று

அல்லும் பகலும் அனவரதமும் தம் உள்ளத்திலே கொண்டு, தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் சிவத்தொண்டுக்காகவே தத்தம் செய்து, மெய்யிலே திருநீறு, வாயிலே திருவைந்தெழுத்து, நினைவிலே சிவ உருவு, நெஞ்சிலே சிவநேசம், உணர்விலே சிவபக்தி, சிந்தனையெல்லாம் சிவமயம் என்று வாழ்ந்து சிவத்தொண்டிற்காக, எவரும் செய்ய நினைக்கக் கூடிய செயல்களை செய்த தொண்டர்கள்தாம் 63 நாயன்மார்கள்.

சிவனடியே சிந்தித்து, சிவத் தொண்டிற்கே தங்களை அர்பணித்துக் கொண்டு, உடல் பொருள் ஆவி அனைத்தையும் அந்த சிவபெருமானுக்கே தத்தம் செய்த அன்பர்களை பெருமைப் படுத்தும் நாள். இறைவன் கழல் ஏத்தும் செல்வமே செல்வம், சிவத்தொண்டே தம் வாழ்க்கை இலட்சியமாக வாழ்ந்து பெறக்கரிய பேறு பெற்ற அறுபத்து மூவர்களுக்கும் ஐயன் அருள் வழங்கும் நாள்தான் அறுபத்து மூவர் திருவிழா.
<!--[if gte mso 9]> Normal 0 false false false EN-US X-NONE X-NONE
<!--[endif]-->





முழுமுதற்க் கடவுள் கணேசன் முதலில் உலா




திருமயிலையின் கோலவிழியம்மன்




அன்பர்கள் ஐயனை வணங்கியபடி முன்னே செல்ல ஐயன் அவர்களுக்கு காட்சி கொடுத்துக் கொண்டே பின்னே செல்லும் நாள். மொத்த தமிழகமும் அந்த மாட வீதிகளிலே குவியும் நாள் மயிலையில் மற்ற தெய்வங்களும் ஐயனுடன் வலம் வரும் நாள் மண்குடத்திலே தாங்கள் வேண்டிக் கொண்டபடி பிரசாதம் இறைவனுக்கு படைத்து அதை அன்பர்களுக்கு வழங்கும் நாள். அறுபத்து மூவர் பெருவிழா என்று அழைக்கப்படும் அந்த நாளின் சிறப்பைக் கூறிக்கொண்டே செல்லலாம். 'தொண்டர் தன் பெருமை சொல்லவும் அரிதே" என்று வியந்து தமிழ் மூதாட்டி பாராட்டியது போல ஐயனின் தொண்டர்கள் அறுபத்து மூவரையும் சிறப்பிக்கும் விழா. இவர்கள் பல்வேறு கால கட்டங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில், பல்வேறு குலங்களில், தோன்றியும் கூட சிவபக்தி என்னும் ஒரே சீர்மை பெற்ற அருள் கூடாரத்துள் ஒன்றுபட்டவர்கள். இவர்களுள் கிரகஸ்தர்களும் உண்டு, பிரம்மச்சாரிகளும் உண்டு. இசைஞானியார், அனைத்துயிர்களுக்கும் அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைத்த காரைக்கலம்மையார், கூன் பாண்டியனாய் இருந்து நின்ற சீர் நெடுமாறனாக ஞானசம்பந்தப் பெருமானால் மாற்றப்பட்ட பாண்டியனின் துணைவி மங்கையர்க்கரசியார் ஆகிய மூன்று பெண்களும் உண்டு.






திருஞான சம்பந்தரால் என்பிலிருந்து பெண்ணாகிய



அங்கம் பூம்பாவை







காலை சுமார் பத்து மனியளவில் தொடங்குகின்றது இந்த அற்புதத் திருவிழா.அம்மையின் ஞானப்பலுண்டு ஐயனிடம் பொற் தாளமும், முத்துப் பந்தலும், முத்துசிவிகையும் பெற்ற திருஞானசம்பந்தப்பெருமான் இந்த திருமயிலையில் நிகழ்த்திய அந்த அற்புத நிகழ்ச்சியாம் என்பான பெண்ணை உயிருடன் கொண்டு வந்த வரலற்றை ஐதீக முறைப்படி நிகழ்த்திக் காட்டுவதை மையமாகக் கொண்டே இவ்விழா சிறக்கின்றது. ஆலயத்திற்கு மேற் புறத்தில் உள்ள எட்டுக்கால் மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றார் ஞான சம்பந்தப்பெருமான் அவரது தந்தையார் சிவபாத இருதயரும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அப்போது மயிலை அன்பர் சிவநேச செட்டியார் சம்பந்தருக்கென்று நிச்சியித்து வைத்திருந்து அரவம் தீண்டி இறந்த பூம்பாவையின் அஸ்தி (இன்று மலர்) கலசத்துடன் அங்கு எழுந்தருளுகின்றார். அம்மண்டபத்தில் அன்று கபாலீச்சுரம் அமர்ந்தான் திருவிழா காணாதே போதியோ பூம்பாவாய் என்று ஆளுடையப்பிள்ளையார் பாடிய பதிகத்தை இன்று ஓதுவா மூர்த்திகள் பாடுகின்றார். சம்பந்தப்பெருமானே பதிகம் பாடுவதாக ஐதீகம், ஒவ்வொரு பாடலின் முடிவிலும் தூப தீப ஆராதனைகள் நிகழ்கின்றன. பத்தாவது பாடலை பாடி முடித்ததும் அந்த அஸ்தி கலசத்திலிருந்து அங்கம் பூம்பாவை உயிர் பெற்று எழுகின்ற வைபவம் பக்த கோடிகளின் பேரார்வ முழக்கத்திற்கிடையே நிகழ்கின்றது. சிவநேசர் அங்கம் பூம்பாவையை ஏற்றுக் கொள்ள வேண்ட இவள் நும் செல்வியல்ல இறையருளால் தோன்றிய எம் செல்வி என்று அங்கம் பூம்பாவையை சிவத்தொண்டில் ஈடுபடுத்திகின்றார் சம்பந்தப் பெருமான்.





மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும்



அண்ணலார் அடியார்தம்மை அமுது செய்வித்தல்



கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல்



உண்மையாம் எனில் உலகர் முன் வருகென உரைப்பார் என்று சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் சீர் பரவும் பெரிய புராணத்தில் அங்கம் பூம்பாவையை உயிருடன் ஞான சம்பந்த பெருமான் அம்மையப்பர் அருளால் எழுப்பிய அற்புதத்தை பாடுகின்றார்.




அங்கம் பூம்பாவையும் அவரது தகப்பனார்
சிவநேச செட்டியாரும்




மாலை
3 மணியளவில் அம்மையப்பர் 63 நாயன்மார்களுக்கு அருட்காட்சி தரும் நிகழ்ச்சி துவங்குகின்றது ஐயன் சர்வ அலங்காரத்தில் வெள்ளி விமானத்திலும் அம்மையும், சண்முகரும், வினாயகரும், சண்டிகேஸ்வரரும் விமானத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். அலங்கார மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கும் அலங்கார தீபத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்று, பின் திருக்கோவில் வலம் வந்து யாக சாலை பூஜை கண்டருளி பின் விமானங்களில் எழுந்தருளி கோபுர வாசல் வழியாக பஞ்ச மூர்த்திகள் பதினாறு கால் மண்டபம் வந்து அருட்காட்சி தருகின்றனர். முதலில் நால்வர் பெருமக்களும் தனித்தனி பல்லக்கில் வந்து அம்மையப்பர் முன் வந்து வணங்கி நிற்க ஒரே சமயத்தில் ஐயனுக்கும் நாயன்மார்களுக்கும் தீபாராதனை நடைபெறுகின்றது. பின் அவர்கள் அம்மையப்பரை வலம் வந்து அம்மையப்பரை நோக்கியபடி முன் செல்கின்றனர். பின் அங்கம் பூம்பாவையும் சிவநேச செட்டியாரும் வந்து அம்மையப்பரை வணங்கி செல்கின்றனர். பின் மற்ற நாயன்மார்கள் அனைவரும் பவளக்கால் சப்பரத்தில் , நால்வர் ஒரு சப்பரத்தில் எழுந்தருளி அருள் பெற்று செல்கின்றனர் அனைத்து நாயன்மார்களும் அம்மையப்பரை வணங்கி சென்ற பின் அம்மையப்பர் மண்டபத்தை விட்டு திருவீதி உலா புறப்படுகின்றனர். அப்போதே மாட வீதியெங்கும் மக்கள் வெள்ளம், திருமயிலையின் நடுவே உள்ள கோவிலை நோக்கி வருகின்ற எல்லா வழிகளிலும் மக்கள் கூட்டம் தேன் கூட்டை நோக்கி தேனீக்கள் வருவது போல அறுபத்து மூவர் திருவிழாவை காண வருகின்றது.



சைவ சமயக் குரவர் நால்வரில் மாணிக்க வாசகர்




அறுபத்து மூவரும் எழிலாக மாட வீதிகளில்


அம்மையப்பரை வணங்கியபடி வலம் வரும் அழகு






மாட
வீதியில் மயிலையின் முண்டககக்கண்ணி அம்மன், கோலவிழியம்மன், திரௌபதி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகியோர் பக்தர்களுக்கு அருட் காட்சி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். பின் வினாயகப்பெருமான் முன்னே வர அறுபத்து மூவர்கள் ஐயனை நோக்கியபடி வரிசைக்கு இரண்டு சப்பரமாக வருகின்றனர் அவர்களுக்கு அருட்காடசி தந்த படி வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரர் வருகின்றார் அவருக்குப் பின்னால் அம்மை கற்பகவல்லி, பின் சண்முகர் அவருக்குப்பின் சண்டிகேஸ்வரர் என்று கபாலீச்சுவரத்தின் மூர்த்திகள் வர அவர்களுக்குப் பின் வாசுகியுடன் உலக பொதுமறையாம் திருக்குறள் அருளிய திருவள்ளுவர் வருகின்றார். அவர்களுக்குப்பின் சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வந்த சுப்பிரமணியரும் திருவீதி உலா வருகின்றார். பின் பிரம்மாண்டமாய் கோலவிழி அம்மன் வருகின்றார்.



வெள்ளி விமானத்தில் அருள் பாலிக்கும் கபாலீஸ்வரர்






ஐயனின் பின்னழகு




மக்கள் வெள்ளத்திற்கு நடுவே அலைகடலில் நாவாய்கள் வருவது போல விமானங்கள் ஆடி வரும் அழகை எப்படித்தான் வர்ணிப்பது? பார்த்தால் மட்டுமே அந்த தெய்வீக உணர்வை நாம் அறிய முடியும். இன்றைய நாள் ஐயனுக்கு மண் கலயத்தில் கரும்பு சக்கரை வைத்து படைத்து அனைவருக்கும் அதை வழங்குவது மிகவும் சிறப்பான நேர்த்திக்கடன் ஆகும். பூம்பாவையை அஸ்தி கலசத்திலிருந்து ஞான சம்பந்தப்பெருமான் எழுப்பியது போல மண் கலயத்தில் நாம் எம் பெருமானுக்கு அமுது படைப்பதால் அனைத்து நன்மைகளையும் வழங்குகின்றார் என்பது ஐதீகம். அந்த மக்கள் வெள்ளத்தில் இன்னிசை வீணையர் யாழினர் ஒரு பால், இருக்கோடு தோத்திரம் இயம்புவர் ஒரு பால், துண்ணிய பினை மலர் கையினர் ஒருபால் தொழுகையர் துவள்கையர் ஒரு பால் கபாலி! கபாலி! என்று ஆற்றி அழுபவர் ஒரு பால் , கயிலையே மயிலை மயிலையே கயிலை என்று துதித்து நிற்பவர் ஒரு பால், தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! என்று போற்றி துதித்து நெக்கு நெக்கு உருகி நிற்பவர் ஒரு பால். அம்மா கற்பகவல்லி நீயே துணை அம்மா என்று அம்மையை வேண்டிநிற்பவர் ஒரு பால் என்று அனைத்து தரத்து மக்களையும் காணலாம். அன்பர்களுக்கு பிஸ்கட், சாக்கலேட், பழச்சாறு, சக்கரைப் பொங்கல், தயிர் சாதம், சித்திரான்னம், தண்ணிர், நீர் மோர், தர்பூசணிப் பழம், என்று எல்லாவிதமான பிரசாதங்களையும் வாரி வழங்குகின்றனர். அதனால் மாட வீதிகள் அன்று அசுத்தமாவது உண்மை ஆனால் அது அந்த ஐயன் அம்மை மேல் அன்பர்கள் கொண்ட பக்திக்கு ஒரு சான்று.




விரை மலர் குழல்வல்லி மறைமலர் பதவல்லி விமலி கற்பகவல்லி
அறுபத்து மூவருக்கும் அருள் பாலிக்கும் கோலம்







அந்தி சாய்ந்தபின் அனைத்து விமானங்களிலும் மின் விளக்குகள் ஒளிரத் தொடங்குகின்றன. அந்த அற்புதக் காடசி நம்மை சொர்க்க லோகத்திற்கே அழைத்து செல்கின்றது. மாட வீதிகளில் உள்ள கட்டிடங்களில் கூட மின் விளக்குகள் குறிப்பாக வெள்ளீசுரர் கோபுரம் மின் விளக்குகளில் மின்னும் அழகே அழகு. நேரம் செல்ல செல்ல மக்கள் வெள்ளமும் அதிகமாகின்றது திருவீதி உலா நகர்வது இப்போது எறும்பு ஊர்வது போல ஆகிவிடுகின்றது. மாட வீதி வலம் முடித்து ஐயன் திருக்கோவில் விழா அடையும் போது இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிடுகின்றது. ஒரு முறை அந்த தெய்வீக தரிசனத்தை கண்டவர்கள் மறுபடியும் மறுபடியும் அறுபத்து மூவர் விழாவைக் காண வருகின்றனர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அவ்வளவு கூட்டம் அந்த மாட வீதிகளில் அன்று கூடுகின்றது என்பதால் தானோ என்னவோ ஆதி காலம் முதல் தமிழ் திரைப்படங்களில் அறுபத்து மூவர் திருவிழாவில் குழந்தைகள் தொலைந்து போவது போல் காட்டுகின்றனர். நான் அன்பர்களுக்கு வைக்கும் வேண்டுகோள் ஒன்று தான் அறுபத்து மூவர் திருவிழா ஒரு மாபெரும் திருவிழா தொண்டர்களின் பெருமையை எடுத்துக் காட்டும் விழா கபாலீஸ்வரரின், கற்பகாம்பாளின் கருணையை பறை சாற்றும் விழா. ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் நிச்சயமாக சென்று அந்த திருவிழா கண்டு அம்மையப்பர் அருள் பெறுங்கள். .



அறுபத்து மூவர் திருவிழா தொடரும் ......

Labels: , , , ,